மேம்பாலத்தில் ஏறின மாடு



புறவழிச்சாலை மேம்பாலத்தின் மேல்
சம்பந்தமே இல்லாமல்
ஒரு மாட்டைப் பார்த்தேன்.
நீண்ட மேம்பாலம்.
ஏறினால்
பல மைல் தாண்டியே இறங்க முடியும்.
ஒதுங்கவும் முடியாது.
நான் கண்டபோது மாடு
நடுப்பாலத்தில் நடந்து கொண்டிருந்தது.
என்ன உந்துதலில் ஏறியதோ !
கண்ட வாகனமும் கடந்து போகும்.
அடிபடாது பிழைத்தால் புண்ணியம்.
இறங்கும் வழி தெரியாமல் தவித்தாலும்
பராக்கு பார்ப்பதில் மட்டும் குறைவில்லை.
நம் பலரின் வாழ்க்கைக்கும்
ஒரு புதிய உவமையைக் கொடுத்ததன்றி
வேறெதற்கும் உதவாமல்
நிதானமாக நடந்து கொண்டிருந்தது மாடு.
எகத்தாளம்தான்!

- மதி

படம் தந்து உதவியமைக்கு நன்றி : C. Bolon

கருத்துகள்

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..