என் மேல் பாய்ந்த தேவ ஒளி

புத்தன்
தன் பயணத்தில்
போதியில் ஒளி கண்டான்.
பித்தன்
என் பயணத்தின்
பாதியில் இருள் கண்டேன்.
என் பாதை
இருளுற்றதேனென்று
ஒளி கண்டேன் !

பயணம் ?

சூல் கொண்ட நீரோடை
மலை வீழும் வேகத்தில்
என் மேல் பாய்ந்தது ஒரு தேவ ஒளி,
ஒரு நிலாமுகத்தில் பிரதிபலித்து !
தரைகண்ட நீரருவி
கடலேகித் தவழ்வது போல்
மனம் மெல்ல நகர்ந்தது காதல் வழி,
துளித்துளியாய் அனுபவித்து !

அவள் முகம் நிறைத்துக் கதிரொளி !
என் மனம் நிறைத்துக் காதல் ஒளி !
ஒளியுடன் ஒளி
ஒன்றெனக் குழைய
ரெண்டிலும் திளைத்து
மருகினதென் மனம் !

எனக்கு மட்டும்
மின்னல் தெறித்தது !
எனக்கு மட்டும்
சாரல் சிலிர்த்தது !
எனக்கு மட்டும் !
காதலின் மாயம் !

ஒளி காட்டித் தந்ததே
என் பயணம்
வழிகாட்டி வந்தது
அவள் மௌனம்.

மௌனம் ?

கண்கள் பேசும்
காதல் பாஷையெல்லாம்
கற்றுக்கொள்ளச் சுலபம்.
அது மொழிமௌனம் .
என்னவள் கண்மொழி கடினம்
இது விழிமௌனம்.

'ஆம்' என்று சொல்வதாய்ப் பார்த்தால்
'அப்படித்தான் அத்தான்' என்னும்.
'இல்லையோ' என்பதாய் நினைத்தால்
'இன்று போய் நாளை வா' என்னும்.
'வரவா' என்றால்
வாரி அணைக்கும்
'போகவோ' என்றால்
'போடா பொரம்போக்கு'
என முறைக்கும்.
என்னவள் கண்மொழி கடினம்
இது விழிமௌனம்.

என் வழிகள் அத்தனையும்
உன்னொரு வார்த்தையைத்தான் தேடுதென்று
கூவிச் சொல்லிக் காதலித்தேன்.

அவளின் மறுத்தலும் மொழிமௌனமும்
மென்மையாய் வழி மாறச் சொல்லும்.
ஆனால் விழிமௌனங்கள்
கூச்சல் போட்டுக் குழப்பி வைக்கும்.
கூச்சலில் ஒன்றும் புரியாவிடிலும்
ஓர் அர்த்த மாயை அமைந்திருப்பது போல்
கானல் நீர் காட்டிக்
காத்திருக்க வைக்கும்.

இருள் ?

கானல் நீரென்று
புரியாமல் கனாக்கண்டு
காதல் வளர்த்தும்
தாகம் வளர்த்தும்
தவித்துத் தவித்துத்
தொடர்ந்து வந்தேன்.

ஒரு புனிதக் கணத்தில்
மின்னலாய்த் தெறித்து
நான் மட்டும் பார்த்த
காதலின் தேவ ஒளியை
அவளறிய வாய்ப்பில்லை.

அந்த ஒருகணத்து மின்னலைத்
தக்கவைத்துத் தடம்புரட்டி
மனம் மாற்றி மின்னிணைத்து
அவள் கண்ணில் ஒளிரவைக்க ..
.........
.........
?

சேர்த்துவைத்த மின்னலொளி
சிறுகச்சிறுகக் குறைந்து போய்
என் பாதையில்
இருள் புலர்கிறது !

ஒளி ?

எனக்கு மட்டும்தான்
மின்னல் தெறித்திருக்கிறது.
எனக்கு மட்டும்தான்
சாரல் சிலிர்த்திருக்கிறது.
எனக்கு மட்டும்தான் !
காதலின் மாயை!

நான் பார்த்த அந்த மின்னல்
மேற்கில் விழுந்ததா
கிழக்கில் விழுந்ததா
உன் கண்ணைத் துளைத்ததா ?
என்று
அடம்பிடித்து நான் கேட்டால்
அவள் பாவம் என்ன சொல்வாள் ?

சொல்லாமல் போகிறாளே
காதலெல்லாம் குப்பையென்று
குழப்பத்தில் பழிப்பித்தால்
காதல் பாவம் என்ன செய்யும் ?

சில மேக உரசல்கள்
புனித மின்னல்களாய்த் தெறித்தாலும்
மழை தரிப்பதில்லை .

காதலில்
காதலிக்க நிறைய உள்ளது
ஒரு 'காதலி'
கூடாமல் போனாலும் !

மின்னல் மறுமுறை வரட்டும்.
உனக்கொன்றும்
எனக்கொன்றுமாய்.
அதுவே பொருத்தம்.
பாவம் நான் வேறென்ன சொல்வேன் ?

அவளுக்குத் தமிழ் கொஞ்சம்
தட்டிதட்டித் தான் மழலை பேசும்.
அதனால் ?

Blessed am I
Blessed is she
Here I choose to let go
For blessed be US
As ME and SHE.

Let there be light
in another divine moment !

-மதி

கருத்துகள்

தொடர்ந்து வாசிக்க..