நாணயத்துக்கு ரெண்டு பக்கம்


இரண்டு வருஷங்களுக்கு முன்
இப்படித்தான் ஒரு நாள்
இவன் காதல் 
கனிந்ததைக் கொண்டாடினோம் . 
இன்றைய தண்ணியடித்தல் 
சோகசாந்திக்காக !

காதலிக்கிறவன்
கவிஞனாய் வேறு
ஆகித் தொலைகிறானா ....
தோற்றவன் வார்த்தைகள் 
நிஜமாகவே கசக்கின்றன .

பைத்தியமாய்க் காதலித்தான்
பாவமாய் இருக்கிறது .

ஒன்றாய்க் கண்ட கனவுகளும்
மாற்றிக்கொண்ட பார்வைகளும்
சின்னச் சின்ன சண்டைகளும்
அதை
முடித்து வைத்த முத்தங்களும் ...
 ஒட்டுமொத்தமாய் மறக்க எண்ணி
ஒவ்வொன்றாய்க் கிளறி எடுக்கிறான் .

அவள் அழகென்று 
பிதற்றியவன்
தான் அழுக்கென்று
புலம்புகிறான் .

பெறப்போகும் பிள்ளைகட்குப்
பெயரெல்லாம் வைத்திருந்தார்களாம்
இனி அவை
எவர் பிள்ளைக்கோ ?

வாங்கித்தருபவன் . 
வருத்தப்படவும்
வாந்தியெடுக்கவும்
பூரண உரிமையுண்டு . 
ஆனாலும் 
இவ்வளவு சீக்கிரம் நாங்கள்
எதிர் பார்க்கவில்லை . 

தனியே அமர்ந்து
வோட்கா அருந்திக்கொண்டிருந்த
பெரியவர் ஒருவர்
அவனைப் பார்த்து 
எங்களருகே வந்தார் . 

"காதலா ?"

"ஆமா சார் "

எத்தனை ரவுண்டாச்சு  ?"

"நாலுதான் சார் "

"போதும் . தாங்காது . சின்னப் பையன் "

அருகிலேயே அமர்ந்து
அவனின் வாய் துடைத்து
வாரி அணைத்துக் கொண்டார் . 

"அழாதேடா ராஜா
அவ போனாப் போறா விடு
ஆம்பளை அழக் கூடாது "

இவன் குழந்தை போல
அவர் தோளில் சாய்ந்துகொண்டான் . 
அனுபவசாலி !

"காதல்
எல்லாருக்கும் ஒத்துக்காதுப்பா "

நீங்களும் காதலிச்சீங்களா சார் ?"

மெலிதாகப் புன்னகைத்தார் .

"முப்பத்தஞ்சு வருஷமாச்சு தம்பி .
அவள் போலொரு பொண்ணை
அதுக்கப்புறம் பார்க்கவேயில்லை . 

ஓரக்கண் பார்வையிலே
உயிர்முழுக்க நெறைஞ்சிருந்தா
சின்ன சிரிப்பு போதும்
உலகமே வெளிச்சமாகிடும். 
செல்லமாக் கோபப்பட்டு மொறைப்பாளே
...........................
இந்த வோட்காவெல்லாம் குப்பையப்பா !
உயிரே போனாலும் 
பிரிய மாட்டேன்னு சொன்னா "

"அப்புறம் என்ன சார் ஆச்சு ?"

"அந்தக் காலக் கதை இல்லையா
அவ அப்பன் ஆள் வெச்சு அடிச்சான்
அரிவாளைக் கூட ஓங்குனான்
நான் விட்டுக்குடுக்கலை "

"அப்புறம் ?"

"காயம்பட்ட இடமெல்லாம்
முத்தம் வெச்சு ஆத்துனா
அவ பொண்ணே இல்லையப்பா
தேவதை !
எத்தனையோ சண்டை
எத்தனையோ பிரச்சினை
எல்லாத்தையும் சமாளிச்சுட்டேன் . 
ஆனாலும் 
கொஞ்ச கொஞ்சமா
நான் அவளைத் தொலச்சுட்டேனப்பா "

சோகமாய்ச் சொல்லிவிட்டு
ஒரு வாய்
வோட்கா உறிஞ்சினார்
பெரியவர் .

என் நண்பன் 
கண்ணீரோடு கேட்டான்

"உங்களையும் 
ஏமாத்திட்டுப் போயிட்டாங்களா சார் ?"

"ப்ச் 
இல்லப்பா
நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்
அதுதான் என்னை 
ஏமாத்திருசு ! "

ஏறின போதையெல்லாம்
எகத்தாளமாய்ச் சிரிக்கத் தொடங்கியது 
எனக்குள்ளே . 

பாரிலே சிறந்த பல
காதல் கதைகளை
பாரிலேதான் கேட்க முடியும் ! 

கருத்துகள்

  1. this work is purely fiction . any resemblance to any character or situation is not intended by the author :-)

    பதிலளிநீக்கு
  2. 'perappogum pillaigalukku peyarellam vaithargal,
    ini avar evar pillaigalo?'

    superb lines. so also is that 'ellarukkum kaadhal othukadu'. kalakita gs. and to read this poem today is like a touch of irony :P
    rombave nalla irukku. enjoyed it a lot.

    பதிலளிநீக்கு
  3. Superb da...But I guessed the ending...Aana etho pakathula irundu paatha maadiriyo ila thaane panna maadiriyo iruke?Ur disclaimer is not fully believable Sir.naamalam ethuku Sir kavidai ezhudarom?Gyabagam iruka ithu?

    பதிலளிநீக்கு
  4. உன்ன மாதிரி பசங்க ஏதோ நானே தண்ணியடிச்சுட்டு போதையிலே எழுதின மாதிரி effect குடுப்பீங்கன்னுதாண்டா அந்த disclaimerஏ ! நான் சொன்னதெல்லம் உண்மை . அதுக்கு கொஞ்சம் மேலே கவிதையிலே நான் சொன்னதெல்லாம் கற்பனைங்கோஓ !!!!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..