பண்டிகைப் புன்னகைகள்


எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ... இந்தப் பண்டிகைக்கு மட்டுமே வாய்க்கப்பெறும் சில பொக்கிஷமான புன்னகை நிமிடங்களைக் கவிதையாக்கி வைத்திருக்கிறேன்... வாசித்து ரசித்துவிட்டு மகிழ்வோடு கொண்டாடுங்கள் ..



நாலோரம் மஞ்சளிட்ட புதுத்துணி
நாவூறும் சுவையிழுக்கும் பலகாரம்
நல்லெண்ணெய்க் குளியலை யார்
நடுவில் கண்டுபிடித்தாரோ என்று
செல்லச் சிறுவன் சிணுங்கும்போது ........

தவழும் பாவாடையைத் தூக்கி ஒரு கை
துணையாய் அண்ணன் விரல்பிடித்து இறுக்கி ஒரு கை
காதைப் பொத்திக் கொள்ள கைகள் பற்றாமல்
வைத்த முதல் வெடி வெடிக்குமுன்னே
குட்டி தேவதை கண் சுருக்கி ஓடி வர ...




பல நாள் பாராமல் பண்டிகைக்கு ஒன்றுகூடி
புதுசுடுத்தி விளையாடிக் கொண்டாடும்
வானரத்தில் ஒரு வாண்டு
பலகாரம் பகிர்ந்துண்கையில்
புரையேறித் திண்டாட .....

அத்தி பூத்தாற்போல் அதிசயமாய் ஒரு நாள்
அத்தை மகள் ரத்தினத்தை
பட்டுப் பாவாடை தாவணியில்
பார்த்து ரசிக்கும் வாய்ப்பிற்காய்
பண்டிகைக்கு வாலிபர் நன்றி நினைக்க ....

மாப்பிள்ளை முறுக்கின் களை குன்றாத தோரணையில்
மணப்பாறை முறுக்குகளை மென்றரைத்துத் தின்றுகொண்டே
மாமனார் உபசரணைகள் மாமன் மச்சான் அறிமுகங்கள்
பலகாரம் பாப்பையா எல்லாம் அலுத்துப் போய்
பரிதாபமாய் ஏங்கிச் சலம்பும் கணவனை
சமையற்கட்டில் மனைவி மறைந்து ரசிக்க ..

விலக்கி வைக்கும் பெண் வீட்டின் கூட்டத்தில்
விளக்கு வைக்கும் பாசாங்குக் கோலத்தில்
ஒரு தனிமையைத் திருடிக் கொண்டு
புது மாப்பிள்ளை காதல் பழக ...


வியாதி தடுத்தாலும் விருப்பம் வெற்றி பெற்று
ஒரே ஒரு அதிரசத்தை அதிகமாய்த் தின்ற தந்தை
வாய் துடைக்காமல் பொய் சொல்லி
விசாரணையில் மாட்டிக் கொள்ள
இதுதான் கடைசி என்று கண்டித்து
இன்னும் ஒன்றை அம்மா அங்கே ஊட்டி விட ...

பல திரிகள் தருகிறது
இந்தப் பண்டிகை
ஒரு புன்னகைக்கு விளக்கேற்ற !

- மதி



கருத்துகள்

  1. பெயரில்லாஅக்டோபர் 29, 2011

    பொதுவாக நாம் பார்க்கும் காட்சிகளை அத்தோடு மறந்து விடுகிறோம்.ஆனால் அதனை இத்துணை அழகாக கவிதை வடிவில் பிரசுரம் செய்த தங்களுக்கு ஒரு சபாஷ்...

    நான் மிக ரசித்தவை...

    தவழும் பாவாடையைத் தூக்கி ஒரு கை துணையாய் அண்ணன் விரல்பிடித்து இறுக்கி ஒரு கை
    காதைப் பொத்திக் கொள்ள கைகள் பற்றாமல் வைத்த முதல் வெடி வெடிக்குமுன்னே குட்டி தேவதை கண் சுருக்கி ஓடி வர ...
    வியாதி தடுத்தாலும் விருப்பம் வெற்றி பெற்று ஒரே ஒரு அதிரசத்தை அதிகமாய்த் தின்ற தந்தை வாய் துடைக்காமல் பொய் சொல்லி விசாரணையில் மாட்டிக் கொள்ள இதுதான் கடைசி என்று கண்டித்து இன்னும் ஒன்றை அம்மா அங்கே ஊட்டி விட ...பல திரிகள் தருகிறது
    இந்தப் பண்டிகை
    ஒரு புன்னகைக்கு விளக்கேற்ற !

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு நினைவை மீட்டெடுக்கிறது.. எமது பார்வையில் உமது கவிதை ஓகோ.. ஓகோகோ..!!

    அருமையான வார்த்தைகளில் அணிவகுப்பைத் தொடர்ந்திருக்கிறீர்கள்..!! வாழ்க பல்லாண்டு..!!!

    பகிர்ந்தமைக்கு நன்றி..!!

    இனி உங்கள் வலை என்றும் என் பார்வையை விட்டு நீங்காது...!!

    என்றும் உங்கள், தங்கம்பழனி.

    பதிலளிநீக்கு
  3. 73-வதாக இணைந்துவிட்டேன் தங்கள் தளத்தில்.. மகிழ்ச்சிதானே?!!!

    பதிலளிநீக்கு
  4. இறுதி வரிகள் அருமை பாஸ்.

    புன்னைகை விளக்கேற்ற .. பல திரிகள் . அடடா

    பதிலளிநீக்கு
  5. நன்றி பாஸ் .. நீங்க என்னோட ஒரு புன்னகைக்கு இப்போ விளக்கேத்தி வைச்சுட்டீங்க :-)

    பதிலளிநீக்கு
  6. da super da... romba nalla irunthuthu... padikum bothae ullathil magilchi nilal aadiyathu... the final lines... beautifully written... good work...

    பதிலளிநீக்கு
  7. நன்றி டேனி .. நீண்ட நாட்களுக்குப் பின் நான் எழுதியதற்கு உன்னுடைய கருத்துகள் ... நான் பள்ளிக்கூட நாட்களில் கவிதை எழுதி உன்னிடம் காட்டி நீ அதை விமர்சித்த சுகமான நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன

    பதிலளிநீக்கு
  8. கடைசி வரிகள்... கலக்கறீங்க மதி ...

    பதிலளிநீக்கு
  9. @ பிரேம்நாத் : நன்றி தலைவா..

    பதிலளிநீக்கு
  10. @ சமுத்ரா... நன்றி நண்பரே .. உங்கள் வலைதளத்தைப் பார்த்தேன்.. சுவாரசியமான ஒன்று !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..