கடைசியாக பூமிக்கு வந்தேன்





முதல் முதலாக 
உன்னை பூமியில் பார்த்தேன் .

மெல்லிய கார்காலத் தென்றலாய்
என் தலை கோதிச் சென்றாய் .
அதன் பின்
உனை நினைத்த போழ்தெலாம்
மனதில் மழை பெய்தது .

என் அகமழையின் ஈரங்களும்
உன் அழகொளிர்வின் உஷ்ணங்களும்
மெல்ல மெல்ல
என் காலடியில்
ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை உருவாக்கி
ஒரு சில நொடிகள்
ஒரு சில அடிகள்
எனைத் தரை மேல் தவழச் செய்தன .

காதல் ஒரு பரந்த தேசம்
காட்டித்தருகிறேன் வாவென்று
என் கற்பனைகளில்
கை நீட்டி அழைத்தது உன் பிம்பம் .
கற்றுக்கொள்ளக் கிளம்பினேன் .

இசையின் மொழிகளிலும்
கவிதை வரிகளிலும்
உன் நினைவுகளைச் சேர்த்துக் கொண்டு
மேகக் கூட்டங்களின் மேல்
ஏறிச் செல்லும் கலை பயின்றேன் . 

ஆழம் தெரிந்து கொள்ளும்
ஆசையின் உந்துதலில்
உன் கண்களில் குதித்தேன் .
ஆழத்தின் அர்த்தங்களையும்
அர்த்தத்தின் ஆழங்களையும்
அணுஅணுவாய்க் கண்டுகொண்டேன். 

காலப் பெருவெளியில்
ஜனனங்களைத் தாண்டி
காத்திருப்பில் நீண்டு
சந்திப்பில் சுருங்கி
நினைவுகளில் உறைந்திடும்
கணங்களின் முகங்களில்
காதலின் விளையாட்டை
ரசித்து அனுபவித்தேன் .

என்னை உன்னில் தேடினேன்
உன்னை நிலவில் தேடினேன்
நம்மில் காதல் தேடினேன்
என் தேடல்களின் முடிவிலும்
உன் மூக்கு நுனி வடிவிலும்
கடவுளை உணர்ந்தேன்
நமைக் கவிதையில் படைக்கையில்
கடவுளாய் உணர்ந்தேன் .

என் இறுமாப்புகளைக் 
கொஞ்சம் இளகவிட்டு
ஏக்கங்கள் 
எல்லை தாண்டின .
உன் கவனத்தைத் 
திருடத் தூண்டின. 
சின்ன ஏமாற்றங்கள்
பெரிதாய் வலிக்கும்
மெய்யறிந்தேன் .

பயணத்தில் எங்கோ போனதும்
சட்டென்று உரைத்தது .
தனியாக நிற்கிறேன். 
அருகில் உன் பிம்பத்தைக் காணவில்லை . 

காதல் ஒரு பரந்த தேசம். 
கஷ்டப்பட்டு வழி தேடி
கடைசியாக பூமிக்கு வந்தேன் .

இங்கே என் காதலி
அதே வனப்புடன்
தனக்கான வட்டத்தில்
சிறகு விரித்துச்
சிரித்து மகிழ்கிறாள் . 

நான்
பூமியில் பூக்கள் பூக்குமென்றும்
குழந்தைகள் மழலை பேசுமென்றும்
மழை நாளில் தேனீர் ருசிக்குமென்றும்
மீண்டும் உணர்ந்து கொண்டிருக்கிறேன் .

சிரிக்கவும் கனவு காணவும்
இப்போது வேறு காரணங்கள்
கண்டு கொண்டிருக்கிறேன் .
வாழ்வின் கதகதப்பு
என் நாட்களை நகர்த்துகிறது .

புரியாத தேசத்தில் 
பாவமாய்த் தொலைந்து
திரும்பி வந்த என் காதல் பிம்பம்
சட்டெனச் சில சமயம் 
கண்ணாடியில் தெரிகிறது . 

இந்த பிம்ப முகத்தில் 
முன்னிருந்த மழலை இல்லை .

-மதி

கருத்துகள்

  1. have i read this one before?
    loved every line of it. romba feel panni ezhudirkardu theriudu. was reading it again and again and again.

    words do touch lives and that is its greatest power. you wield that power with amazing alacrity. awesome!!!

    பதிலளிநீக்கு
  2. really don kno hw 2 comment..u r simply ruling with words...சிரிக்கவும் கனவு காணவும்
    இப்போது வேறு காரணங்கள்
    கண்டு கொண்டிருக்கிறேன் .
    வாழ்வின் கதகதப்பு
    என் நாட்களை நகர்த்துகிறது .priceless lines....gear up..forget tat u ve brakes...!!!

    பதிலளிநீக்கு
  3. என் அகமழையின் ஈரங்களும்
    உன் அழகொளிர்வின் உஷ்ணங்களும்
    ..........


    ஆழத்தின் அர்த்தங்களையும்
    அர்த்தத்தின் ஆழங்களையும்
    அணுஅணுவாய்க் கண்டுகொண்டேன்.
    ...


    காதல் ஒரு பரந்த தேசம்.
    கஷ்டப்பட்டு வழி தேடி
    கடைசியாக பூமிக்கு வந்தேன் .

    thanx both .. as a writer these are my fav lines in this poem. true this poem had more than mere linguistic significance in my life. it helped me emotionally too

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..