கோபித்துப் போன குரல்


நேற்று வரை
நாங்கள் இப்படிப் பழகவில்லை .

சொல்லாமல் கொள்ளாமல்
ஒரு உச்சத்தில் உடைந்து
என்னை ஊமையாக்கியது குரல் .

கட்டிக் கொண்ட தொண்டை
காற்றை மட்டும்தான் உமிழ்கிறது .
காற்றால் பேச முடியவில்லை
என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை .
சைகை புரியும் கைகளோடும்
என் சைகைகள் புரியும் நண்பர்களோடும்
மௌன மொழி பயின்றேன் ....
ஒரு மூன்று நாட்களுக்கு !

உலகம் வித்தியாசமாய்த் தெரிந்தது
மொழி சுவாரசியமாய் இருந்தது .

புரியவைக்க முடியவில்லை
குழந்தையாய் உணர்ந்தேன் .
பிறர் புரிந்து கொள்ளவில்லை
ஞானியாய் உணர்ந்தேன் .

என் சைகைப் பரிவர்த்தனை கண்டு
'பாவம் பிறவி ஊமை' என்று
பரிதாபப்பட்டாள் பேருந்தில் ஒருத்தி .
நேற்று
புதிதாய்ப் பிறந்தது போல் உணர்ந்தேன் .

கேள்வியும் பதிலும் கருத்தும் இல்லாமல்
பேசாமல் ,
'வெறுமனே' உலகைப் பார்த்ததில்
மௌனத்தின் மதிப்பறிந்தேன் .

பேசத் துடித்து
பிரயத்தனப்பட்டுப் புரியவைத்த
ஓரிரு வார்த்தைகளில்
மொழியின் மதிப்பறிந்தேன் .

கண்ணின் அசைவுகள்
காதலிக்கு மட்டுமல்ல
கச்சிதமாய்த் தோழர்க்கும் புரிந்தது .

பலவேறு வார்த்தைகளின் இடத்தில்
ஒரு புன்னகை போதுமென்றானது .

என்னோடு பேசிக்கொண்டதில்
எல்லோரையும் மௌனம் தொற்றியது .

சப்தங்கள் குறையக் குறைய
உள்ளுக்குள் சலனங்கள் குறைய
ஆழ்மனத்தில் அமைதி உணர்ந்தேன் .
பரம்பொருள் பக்கமானது .

கோபித்துப் போன குரல்
பழம் விட்டுச் சேர்ந்ததும்
வார்த்தை வார்த்தையாய்ச்
சொல்லிப் பார்த்துத்
துள்ளிக் குதித்தேன் .
பால்யம் திரும்பி வந்தது .

எக்கச்சக்கக் கோணங்கள்
புதுப் புது பார்வைகள் .

தொண்டை வேந்தே !

நேற்று போல் நாம்
இதுவரை பழகவில்லை !

கருத்துகள்

  1. INIMELAVADU UN KURAL AH KOBITHU POGAVIDAMA SANTHOSHAMA VACHU KAPATHU

    பதிலளிநீக்கு
  2. a typical gs kavidai.a different perspective on an ordinary sore throat. absolutely brilliant.

    பதிலளிநீக்கு
  3. mounam oru azhagana kavithai...
    manirathnam padam pola....
    vazhthukkal senior...

    பதிலளிநீக்கு
  4. புரியவைக்க முடியவில்லை
    குழந்தையாய் உணர்ந்தேன் .
    பிறர் புரிந்து கொள்ளவில்லை
    ஞானியாய் உணர்ந்தேன்

    superbb thoughts machaan...

    பதிலளிநீக்கு
  5. Rasikan - Adhan pin vilaivudhan matradhellam apdingra "About me" column padichuttu ulla varravangala ovvoru padaippilum rombave thirupdhi paduthureenga!!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..