பிள்ளையார்சுழி


ஏதாவது எழுத வேண்டும்
எனக்குள் வாழும்
எனக்காக .
அடிக்கடி இப்படித் தோன்றும் .
கைகள் பேனா தேடும்
கண்கள் காகிதம் தேடும்
மூளை என் எழுத்துக்கு
முகவரி தேடும்
ஏதோ ஒன்று கிடைக்காமல்
எத்தனையோ எண்ணங்கள்
மொட்டிலேயே
பட்டுப் போயிருக்கின்றன !
இன்று எல்லாம் கிடைத்திருக்கிறது
ஏதாவது எழுத வேண்டும் !
மழலைச் சிரிப்பா ?
மனிதச் செருக்கா ?
மழை நாள் கிறக்கமா ?
மத்தியான உறக்கமா ?
உயிர்ப்பா ? தவிப்பா ?
கனவா ? திட்டமா ?
தாயா ? தமிழா ?
கடவுளா ? கலையா ?
நிகழ் காலமா ? எதிர் காலமா ?
காலத்தை வென்ற
கரப்பான்பூச்சியா ?
மரபுக் கவிதையா ?
புதுக் கவிதையா ?
எதை ?
ஏதாவது ...
சில சமயம் இப்படித்தான்
என் நரம்புப் பின்னல்கள்
தேவைக்கதிகமாக
உணர்ச்சிவசப்பட்டுவிடும் ,
தேவையைப் பூர்த்தி செய்யாமலேயே !
கடிதம் எழுத விழைகிறேன்
என் பேனாவில்
பிள்ளையார்சுழி
போட மட்டுமே
மை இருக்கிறது !
அதுவும் அழகாய்த்தானே இருக்கிறது
இப்போதைக்கு
இந்தப் பிள்ளையார்சுழியுடனே
'இப்படிக்கு' போடுகிறேன் !

கருத்துகள்

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. the lines expresses clearly why have selected this as your blog title.
    machi ithu gethu

    regards
    vignesh

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..